76 வயதில் மறுமணம் செய்ய மறுப்பு தெரிவித்த மகனை சுட்டுக் கொன்ற தந்தை
1 min read
Father shoots son dead at 76 after he refused to remarry
11.3.2025
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.
ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.
ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.
ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார்.