ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் அரைகுறை ஆடை பேஷன் ஷோ
1 min read
Semi-formal fashion show in Jammu and Kashmir during Ramadan
11.3.2025
ரம்ஜான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல டிசைனர்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா சேர்ந்து நடத்தும் ஆடம்பர பேஷன் பிராண்டான ஷிவன் அண்ட் நரேஷ். இந்நிறுவனத்தின் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மார்ச் 7 ஆம் தேதி குல்மார்க்கில் ஒரு பேஷன் ஷோவை அவர்கள் நடத்தினர்.
அவர்கள் வடிவமைத்த ஆடைகளை அனைத்து மாடல்கள், பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் அணிவகுத்து நடந்தனர்.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் இந்த பேஷன் ஷோவில் கவர்ச்சியாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வளம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பாரூக் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து, இது அநாகரீகமானது என்றும் காஷ்மீரின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் கண்டிடிருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்திலும் இந்த பேஷன் ஷோ விவாதப்பொருள் ஆனது. இதுதொடர்பாக அவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, குல்மார்க்கில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு தனியார் நிகழ்ச்சி. இதில் அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது.
எனினும் இந்த ஆடை அணிவகுப்பு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் இந்த ஷோவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் ரீதியாக தங்கள் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களான சிவன் பாட்டியா மற்றும் நரேஷ் குக்ரேஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘புனித ரம்ஜான் மாதத்தில் குல்மார்க்கில் நடந்த எங்கள் பேஷன் ஷோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
எங்கள் நோக்கம் படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டாடுவது மட்டுமே, யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல.
நாங்கள் அனைத்து கலாச்சாரங்களையும் மரபுகளையும் மதிக்கிறோம், மேலும் உங்களின் கவலைகளை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.
சிரமத்திற்கு நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் இருக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.