கடையநல்லூர்: பெண்ணை கொன்ற கணவர் கோர்ட்டில் சரண்
1 min read
Kadayanallur: Husband who killed woman surrenders in court
14/3/2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப்பகுதி செவல் விளை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி( 30). இவர்களுக்கு ஸ்ரீ (10) பூரண செல்வி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி செல்வி திடீரென்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்தை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100க்கு தொடர்பு கொண்டு செல்வியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் க.ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம மரணம் அடைந்த செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் செல்வியின் கணவர் முருகன் தென்காசி நீதிமன்றத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி செல்வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும் அதில் அவர் இறந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நீதிபதி பொன் பாண்டி முருகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் உடனடியாக அவரை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் போலீசார் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.