193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min read
Thirukkural to be translated into 193 languages - Budget announcement
14/3/2025
சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், ‘இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்’ என்றார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:
- 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஒலைச்சுவடிகள் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.
- தமிழக பாடநூல் கழகத்திற்கு ரூ.120 லட்சம் ஒதுக்கீடு
- சென்னைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு
- தமிழர்கள் அதிகம் வசிக்கும் டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
- மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
- ஆண்டுதோறும் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.
- தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு
- ஊரக பகுதிகளில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
*2,329 கிராமங்களில் ரூ.1,887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
*ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்
*ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள். 29.74 லட்சம் பேர் பயனடைவர்.
*ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்.
*கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம்
*வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் உருவாக்கப்படும்.
8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள்
- சிவகங்கை- கீழடி
- சேலம்- தெலுங்கனூர்
- கோவை- வெள்ளலூர்
- கள்ளக்குறிச்சி- ஆதிச்சனூர்
- கடலூர்- மணிக்கொல்லை
- தென்காசி- கரிவலம்வந்தநல்லூர்
- தூத்துக்குடி- பட்டணமருதூர்
- நாகப்பட்டினம்
அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது; அன்று இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். எனவே இது தி.மு.க., அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
936 இடங்களில் ஒளிபரப்பு
சென்னை மாநகராட்சியில் 100 இடங்கள்; மற்ற 24 மாநகராட்சிகளில் 48 இடங்கள்; 137 நகராட்சிகளில் 274 இடங்கள், மாநிலம் முழுதும் 425 பேரூராட்சிகள் என, மொத்தம் 936 இடங்களில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது ஒளிபரப்பு செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, ரயில், பஸ் நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அமளி
இதற்கிடையே அ.தி.மு.க.,வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.