கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
1 min read
Edappadi Palaniswami pays tribute to Karuppasamy Pandian
27.3.2025
நெல்லையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் சமீப காலமாகவே வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கருப்பசாமி பாண்டியன் மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் கல்லூர் வேலாயுதம், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, பொருளாளர் வக்கீல் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், சந்திரசேகர் மற்றும் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ம.தி.மு.க.வினர் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமையில் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் கனி ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். கருப்பாசாமி பாண்டியன் உடல் திருத்து கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாளையங்கோட்டை அடுத்த திருத்து பகுதியில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.