9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
1 min read
Teacher suspended for using double-meaning language with 9th girl students
28.3.2025
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த அன்பழகன் (வயது 59) என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தெரிகிறது. இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மாணவிகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியர் அன்பழகனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அன்பழகன் இன்னும் 3 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.