தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்தேன்: அண்ணாமலை பேட்டி
1 min read
I came into politics to bring about change in Tamil Nadu: Annamalai interview
30.3.2025
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
பா.ஜ.க, தலைவர்கள் நட்டா, அமித்ஷா அமைப்புச் செயலர் சந்தோஷிடம், தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது.எப்படி மாறி உள்ளது என்பது குறித்து விவரித்து உள்ளேன். தென் மாவட்டங்கள், கொங்கு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
கூட்டணி குறித்த விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதிக்கருத்து. தமிழகம் நன்றாக இருக்கவேண்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. பா.ஜ.க, வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்க வேண்டும். எந்த தலைவர் கட்சி மீது கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. பா.ஜக,வளர்ச்சி முதன்மை அதை விட தமிழகத்தின் நலன் முதன்மை.
டெல்லியில் பேசும்போது தொண்டனாக பணியாற்றவும் தயார் எனக்கூறியுள்ளேன். அதன் பொருளையும் உணர்ந்து கொள்ளுங்கள். அண்ணாமலை அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்கு கிடையாது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான். 2020 ஆக.,25 ல் பா.ஜ.க,வில் இணைந்தது முதல் எனது எண்ணத்தில் சிறு பிசிறு கிடையாது. எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதை 5 ஆண்டுகள் பிறகும் அதே உணர்வோடு நின்று கொண்டுஉள்ளேன். கூட்டணி குறித்தும், பா.ஜ.க, தலைவர் குறித்தும் நீங்கள் பார்ப்பீர்கள்.
எதையும் மாற்றி மாற்றி பேசுபவன் அண்ணாமலை அல்ல. எதற்காக அரசியலுக்கு வந்தேனோ அந்த வெறியும், பசியும் , நெருப்பும் எரிந்து கொண்டு உள்ளது. அதேநேரத்தில் கட்சி முதன்மையானது. பா.ஜ.க, பொறுத்தவரை நிறைய முடிவுகள் எடுத்து இருக்கிறேன். தொலைநோக்கு பார்வையோடு முடிவு எடுத்து இருக்கிறேன். நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் யாருக்கும் பிரச்னை வராது.
என்னுடைய நிலைப்பாடு ஒன்று தான். தமிழகம் முதன்மையானதாக இருக்கும். பா.ஜ.க, வளர்ச்சி இருக்க வேண்டும். அதில் என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியோ மற்றவரின் வளர்ச்சியோ கிடையாது.
யாரைப் பற்றியும் கடுமையாக விமர்சிக்கவில்லை.. கருத்துக்களை கருத்துக்களாக வைத்து இருக்கிறேன். கருத்துக்களை கருத்துக்களாக எதிர்கொள்ள வேண்டும். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், எங்களுடைய கருத்துகளை வலிமையாக கூறியிருக்கிறேன்.
மாநில எதிர்க்கட்சி தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் சந்தித்ததுதவறு இல்லை. தமிழகத்தில் யார் விமானம் ஏறினாலும், டெல்லி வந்து பா.ஜ.க, தலைவரை சந்திப்பதாக செய்திகள் எழுதப்படுகின்றன.
செங்கோட்டையன் பயணம் குறித்து யூகம் எழுதப்பட்டது. யாரையும் திரைமறைவில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பா.ஜ.,விற்கு இல்லை. வெளிப்படையாக எப்போதும் இருக்கிறோம். காங்கிரசை போல், டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை பா.ஜ.க, எப்போதும் கட்டுப்படுத்தாது. அதற்கு பா.ஜ.க, சரித்திரமே சாட்சி.
விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததால், அவரது கட்சியுடன் உறவு கிடையாது. மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறும்போது, மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு அரசியல் நியாயம் கற்பிப்பதை மறுக்கிறேன்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பள பாக்கி என்றால் போலி கணக்கு எழுதப்படுகிறது. மத்திய அரசு சிறப்பு அதிகாரிகள் குழு போட்டு ஆய்வு செய்து, பணத்தை திருடியவரை சிறையில் அடைக்க வேண்டும்.
கிராம சபையை கூட்டி பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் போட சொல்கிறார்கள். இதனால், அமைச்சர்கள் ஓடுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.