100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
1 min read
Irregularities in 100-day work program; Annamalai agitation allegation
30.3.2025
100 நாள் வேலை திட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அண்ணாமலை கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
1 மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ரூ.39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?
இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி தி.மு.க., வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு, என்று அதன் விபரங்களையும் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது முதற்கட்ட பட்டியல் தான் என்றும், அடுத்த கட்ட பட்டியலை தயார் செய்யும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.