அண்ணாமலையை மாற்ற திட்டமா?பா.ஜ.க. மேலிடம் ஆலோசனை
1 min read
Plan to change Annamalai? BJP top brass consults
31.3.2025
மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-
நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.
கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.
என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.
அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.
எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.
அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.
ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.
இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.
எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.