June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

வக்பு வாரிய சீர்திருத்தம் கட்டாயம் தேவை- அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு

1 min read

Waqf Board reform is a must – Ajmer Dargah chief announces

31.3.2025
”மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதா, வக்பு நிர்வாகத்தில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உள்ளது. சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பொறுப்பேற்க வைப்பதன் மூலம், வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேற நாம் பணியாற்ற முடியும்,” என்று, அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவரும், சிஸ்டி பவுண்டேசன் தலைவருமான ஹாஜி சையத் சல்மான் சிஸ்டி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். வக்பு வாரியம் தற்போது தவறான நிர்வாகம், வெளிப்படையற்ற தன்மை, திறனற்ற செயல்பாடுகளால் முடங்கியுள்ளது.

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நில உரிமையாளராக வக்பு வாரியம் உள்ளது. வக்பு வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், பள்ளிகள், மருத்துவமனைகள், நுாலகங்கள் போன்றவற்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே.
ஆனால் உண்மையில் இஸ்லாமிய சமுதாயத்தின் நன்மைக்கு இந்த சொத்துக்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது பெரிய கவலையாக உள்ளது.மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள வக்பு திருத்தச் சட்டம், வக்பு வாரியத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உள்ளது.
இத்தகைய சீர்திருத்தங்கள் முக்கியமானவை. ஏனெனில், தற்போது வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்வோர், நம்பகத்தன்மை இல்லாதவர்கள். அவர்கள் வக்பு சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக இஸ்லாமிய சமுதாயத்தினர் உறுதியாக நம்புகின்றனர். அவர்களது திறனற்ற செயல்பாடுகளால் வக்பு சொத்துக்களின் வருமானத்தை உயர்த்த முடியவில்லை.வக்பு சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையற்ற நிலை இருப்பதால் ஊழல் மலிந்து விட்டது.
இதற்கு, வக்பு சொத்துக்களின் வாடகை நிர்ணயமே மிகச்சிறந்த உதாரணம்.இந்த சொத்துக்கள் அனைத்தும், பல தலைமுறைகளுக்கு முன்னதாக வாடகைக்கு விடப்பட்டவை. 1950ம் ஆண்டுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட சொற்பமான தொகை வாடகையாக இருக்கிறது. அது கூட தொடர்ந்து வசூலிக்கப்படுவதில்லை.

ராஜஸ்தான் மாநிலம், ஜெயப்பூரில் பிரதான இடத்தில் மிர்ஸா இஸ்மாயில் பெயரில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகை வரக்கூடிய கடை, மாதம் 300 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி ஆயிரக்கணக்கான குறைபாடுகள் உள்ளன.

இத்துடன், சட்ட விரோதமாக வக்பு சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதும் நடக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு வெளியான சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, வக்பு சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இப்போதைய சந்தை மதிப்பையும் சேர்த்து கணக்கில் கொண்டால், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்.

ஆனால், வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்து கொண்டிருக்கிறது.எனவே நல்ல முறையில் நிர்வாகம் செய்தால், வக்பு சொத்துக்களின் வருவாயை பன்மடங்கு உயர்த்த முடியும். அதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள், பல்கலைகள், மருத்துவமனைகளை ஏற்படுத்த முடியும். அவற்றின் மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய மக்களும் பயன் பெற முடியும்.

வக்பு வாரியங்கள் மற்றும் மத்திய வக்பு கவுன்சில் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வதன் மூலம், புதிய சட்ட மசோதா, அதிக பொறுப்புணர்வும், மேம்பட்ட வெளிப்படைத்தன்மையும் கொண்ட நடைமுறையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பொறுப்பேற்க வைப்பதன் மூலம், வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேற நாம் பணியாற்ற முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.