அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்
1 min read
Aadhaar services at post offices
1.4.2025
தென்காசி மாவட்டம் தென்காசி சங்கரன்கோவில் கோவில்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்களின் நலன் கருதி ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்
செ.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான
ஆதார் சேவைகளை பெற பொதுமக்கள் அஞ்சலகங்களை அணுகலாம். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட, கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 29 அடையாளபடுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், தங்கள் ஆதார் விவரங்களை (பயோ மெட்ரிக் / டெமோகிராபிக்) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆதார் சேவையை பொதுமக்கள் பெறுவதிலுள்ள சிரமங்களை தவிர்க்கும் விதமாக அனைத்து அடையாளபடுத்தப்பட்ட அஞ்சலகங்களிலும் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் தங்களது ஆதார் அட்டையினை புதுப்பித்த நிலையில் வைத்து கொள்ளும்படியும் கோவில்பட்டி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.