காதலனுக்கு தாரை வார்த்தப் பின்னர் திரும்பி வந்த மனைவி
1 min read
A wife who returned after being married to her lover
2.4.2025
உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.