கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி மலை அடிவாரத்தில் தங்கும் விடுதி- சந்திரபாபு நாயுடு தகவல்
1 min read
Accommodation at the foot of Tirupati hill to avoid crowding – Chandrababu Naidu information
3.4.2025
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.
தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அமராவதியில் முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.