ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் டாக்டர் புகார்
1 min read
Female doctor complains against IPS officer for flirting with her by saying words of desire
13/4/2025
மராட்டிய மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக தர்ஷன் (வயது 30) பணியாற்றி வருகிறார். போலீஸ் அதிகாரியாக இருக்கும் தர்ஷனுக்கும் இன்ஸ்டா மூலம் நாக்பூரை சேர்ந்த 28 வயது பெண் டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.
இதையடுத்து பெண் டாக்டரை கேரளாவிற்கு விடுமுறைக்காக தர்ஷன் அழைத்து சென்றுள்ளார். அங்கு ஹோட்டல் அறையில் வைத்து பெண் டாக்டரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு நாக்பூரிலும் மீண்டும் ஆசைவார்த்தை கூறி டாக்டரிடம் உல்லாசத்தில் ஈடுபட்டார். மேலும் தஷ்சன் போலீஸ் வேலைக்கு சேரும் முன்னர் அவருக்கு தேவையான பண உதவிகளை அந்த பெண் டாக்டர் செய்து வந்தார். அத்துடன் தர்ஷனின் தாயாரின் மருத்துவ செலவுக்கும் பணம் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஐ.பி.எஸ்.பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு தர்ஷனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தர்ஷன் ஐதராபாத்தில் பயிற்சிக்கு சென்றார். அங்கு பெண் டாக்டர் சென்றபோது அங்கு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தர்ஷனிடம் அப்பெண் டாக்டர் தன்னை திருமணம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தர்ஷன் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு சாதிப்பெயரை கூறி பெண் டாக்டரை திட்டி விரட்டி விட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து சித்ரவதையை அனுபவித்து வந்த அப்பெண் டாக்டர் தற்போது போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தர்ஷன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.