நாட்டுக் கோழி, ஆடு, பன்றி பண்ணைக்கு மானியம்- தென்காசி கலெக்டர் தகவல்
1 min read
Subsidy for local chicken, goat and pig farms in Tenkasi district
16.4.2025
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணை, பன்றி வளர்ப்பு பண்ணை, வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த்த கலப்பு உணவு தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும். தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும். புதிய கால்நடைப்பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது.
புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின்வழி மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி கோழிவளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில்முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 இலட்சம் வரையும், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.50.00 இலட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15.00 இலட்சம் முதல் ரூ.30.00 இலட்சம் வரையும் வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த்த கலப்பு உணவு தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தனி நபர். உதவி குழுக்கள் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு விவசாய கூட்டுறவுகள். கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள் https//nlm.udyamimitra.in/என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை https://www.tolda.tn.gov.in என்கிற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள். அருகிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.