குழந்தை கடத்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவு
1 min read
Supreme Court issues strict order on child abduction case
16.4.2025
உத்தரபிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இம்மனுக்களை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, “ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாகக் கையாண்டது, இதனால் பல குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்த குற்றவாளிகள் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளனர். ஜாமின் வழங்கும்போது உயர் நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர்” என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், “ஒரு மருத்துவமனையில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், முதல் படியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே, குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு ஜாமின் வழங்கியதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.