இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? உச்சநீதிமன்றம் கேள்வி
1 min read
Will Muslims be allowed in Hindu trusts? Supreme Court questions in Waqf case
16.4.2025
வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது.
இந்த வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி.. ஜே.டி.யு. ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின்போது, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வக்பு சொத்துக்கள் எவை என மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிப்பது நியாயமானதா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இனிமேல் உறுப்பினர்களாக இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா?. இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆகியவற்றில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? இப்படியிருக்க, வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்த வினாக்களுக்கு வெளிப்படையாக பதில் சொல்லுமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கண்டிப்புடன் கேட்டனர். மேலும் இவற்றுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
முன்னதாக மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வக்பு வாரியத்தில் பிற மதத்தினரை உறுப்பினராக சேர்ப்பது நேரடி விவிதிமீறல் என வாதிட்டார். மேலும் “இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்திற்கு பிறகுதான். அதற்கு முன்பாக யாரும் தலையிட முடியாது” என வாதிட்டார்.