தென்காசி: நண்பனை வெட்டிக்கொலை செய்த ஆசாமிக்கு இரண்டு ஆயுள் தண்டனை
1 min read
Tenkasi: Man who hacked and murdered friend gets two life sentences
24/4/2025
தென்காசி அருகே ஆய்க்குடியில் நண்பனை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகாதேவன் என்கிற தேவா என்பவரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த அவரது நண்பன் மகாதேவன் என்கிற வரிப் புலி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கொலை மிரட்டலுக்காக 7 வருட சிறை தண்டனையும் மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பிளி பகுதியைச் சார்ந்தவர் வேல்சாமி என்பவரது மகன் மகாதேவன் என்ற தேவா (வயது 25) அதே பகுதியை சார்ந்த பக்கத்து வீட்டுக்காரர் அழகையா தேவர் மகன் மகாதேவன் என்ற வரிப்புலி (வயது 25) இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் முன்விரோதமாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19.06.2021 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய அப்பா வேல்சாமி, அம்மா முப்பிடாதி மற்றும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மகாதேவன் என்ற தேவாவின் வீட்டிற்கு வந்த மகாதேவன் என்ற வரிப்புலி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகாதேவன் என்ற தேவாவை வீட்டிற்குள் புகுந்து அவரது முதுகில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில்
பலியானார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகாதேவன் என்ற தேவாவின் பெற்றோர்கள் மற்றும் சகோதர் கொலையாளி மகாதேவன் என்ற வரிப்புலியை பாய்ந்து பிடிக்க சென்ற போது அவர்களையும் அரிவாளால் வெட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஒடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கொலையுண்ட மகாதேவன் என்ற தேவாவின் தந்தை வேல்சாமி ஆய்க்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மகாதேவன் என்ற தேவாவின் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பேரில் கொலையாளி மகாதேவன் என்ற வரிப்புலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை குற்றவாளி மகாதேவன் என்ற வரிப் புலி ஆய்குடி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு, தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ,
இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி வாதிட்டு வந்த நிலையில் இன்று நீதிபதி மனோஜ் குமார் கொலை குற்றவாளி மகாதேவன் என்ற வரிப்புலிக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்ததால் ஒரு ஆயுள் தண்டனையும் மொத்தம் இரண்டு ஆயுள் தண்டனையும், சம்பவ இடத்தில் அவரை பிடிக்க முயன்ற மகாதேவனின் பெற்றோரை கொலை மிரட்டல் விடுத்தற்காக 7 வருட சிறை தண்டனையும் மேலும் அபராதம் பத்தாயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக மேலும் மூன்று மாத சிறை தண்டனையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என்றும், இந்த தண்டனைகளை
ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.