எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
1 min read
Pakistan refuses to hand over Border Security Force soldier to India
26/4/2025
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர்.
17 ஆண்டுகளாக எல்லைப்பாதுகாப்புப்படையில் பணியாற்றி வரும் பூர்ணம் குமார் ஷா (வயது 40) பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு படையினர் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், வழக்கமாக இதுபோன்று இருநாட்டு வீரர்களும் எல்லையை தவறுதலாக கடக்கும்போது இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் இந்திய வீரர் பூர்ணம் குமாரை விடுதலை செய்ய பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் 3 முறை இந்திய, பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்புப்படை உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பூர்ணம் குமாரை விடுதலை செய்ய பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. பூர்ணம் குமாரை மீட்க மத்திய அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட முயற்சி என்ன? என்பது குறித்து தற்போதுவரை தகவல் வெளியாகவில்லை.