டெல்லியில் சி.பி.எஸ்.இ. ஆட்சேர்ப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்- 4 பேர் கைது
1 min read
4 arrested for impersonation in CBSE recruitment exam in Delhi
27.4.2025
சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற ஒருவர் மீது அந்த பள்ளியின் ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. பயோ மெட்ரிக் பதிவில் அந்த நபரின் பதிவுகள் பொருந்தவில்லை.
இது குறித்து அந்த ஆசிரியர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், தேர்வு எழுத வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சச்சின். அவர் நிதின் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்தது கண்டறியப்பட்டது. இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டம் தொடர்பாக கைமாறிய தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த ஆள் மாறாட்ட மோசடியில் மேலும் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.