இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் கண்ணாடியை உடைத்த இந்தியர் கைது
1 min read
Indian arrested for breaking glass at Pakistan embassy in UK
29.4.2025
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் கடந்த சில நாட்களுக்குமுன் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாகிஸ்தான் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய இங்கிலாந்து வாழ் இந்தியரான அங்கித் (வயது 41) என்பவரை லண்டன் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அங்கித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.