June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

1 min read

The 71st youngest head of the Kanchi Shankara Math took charge

30.4.2025
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கான விழா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த திருக்குளத்தில் இன்று காலை நடந்தது.

சன்னியாச தீட்சை

சுப்பிரமணிய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர மடத்தின் தற்போதைய 70-வது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

புதிய இளைய பீடாதி

பீடாதிபதியாக பொறுப்பேற்ற கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்தனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் சுதா சேஷய்யன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு இளைய மடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவில் வளாகம், காஞ்சி சங்கர மடம் ஆகியவை வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.