விபத்தில் சிக்கிய மதுரை ஆதினம்- ” கொலை செய்ய சதி” என குற்றச்சாட்டு
1 min read
Madurai Aadinam involved in accident – Accused of “conspiracy to commit murder”
3.5.2025
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்துக்கொண்டிருந்த போது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்த காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதீனம் சென்னைக்கு வந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், இந்த விபத்து திட்டமிட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா.
புத்தர் ஆட்சி காலம் பொற்காலம் என்பார்கள், நான் பார்த்ததில்லை. ஆனால் எங்கள் தர்மபுர ஆதினத்தின் காலம் பொற்காலம் தான். பாஜகவில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் ஆண்டாலும், சிறந்த ஆளுமையாக இருப்பவர் பிரதமர் மோடி தான். கவர்னர் ஆர்.என்.ரவி மிகவும் துணிச்சலானவர்
கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்கின்றனர். இந்துக்கள் சுண்டல் தருகிறார்களா என கேட்கின்றனர்” என்று அவர் கூறினார்.