இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் விவரம்
1 min read
Details of Pakistan Air Force bases attacked by India
10.5.2025
தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் உள்ள நூர் கான் , ரபிக்கி, முரித் விமானபடை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன் செயல்பாடுகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று இரவு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விமானப்படை கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது: ரபிகியூ, முரித் ,சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ்ரூர் ரேடார் தளம் மற்றும் சியால்கோட் விமான தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்த தளங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
இந்த இலக்குகளை தேர்வு செய்வதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது. டுரோன் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானை முடக்குவதே இதன் நோக்கமாகும். இந்த தாக்குதல் மூலம் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் மற்றும் வான் உளவு பார்க்கும் திறனை பாதிக்கப்படக்கூடும்.
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பாக்.,விமான படை தளங்கள் வருமாறு-
நூர்கான் தளம்
முன்பு சக்லாலா விமானப்படை தளம் என அழைக்கப்பட்ட இந்த நூர் கான் விமான படை தளம் ராவல்பிண்டியில் அமைந்துள்ளது. இந்த விமான தளம் பாகிஸ்தானின் வான் வழி இயக்கத்தின் முக்கிய மையமாகவும், அதன் வான்வெளி விமான போக்குவரத்து கட்டளை தலைமையகமாகவும் செயல்பட்டது.கடந்த 72 மணி நேரத்தில் இந்திய நகரங்கள் மீது டுரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் இந்த விமானப்படை தளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய பல போர் விமானங்களும் இந்த தளத்தில்தான் இருந்தன.
ரபிக்கி விமான படை தளம்
இந்த விமான படைதளம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. மிராஜ் மற்றும் ஜேஎப்.,17 போர் விமானங்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாக்., தாக்குதல் இங்கிருந்து தான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் தாக்குதல் திறனுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டது.
முரித் விமானபடைதளம்
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்த விமானபடை தளமானது, அந்நாட்டின் டுரோன் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகத்தது. பாகிஸ்தான் உருவாக்கிய ஷாபார் , துருக்கியின் பைரக்தார் டிபி2 மற்றும் அகின்சி டுரோன்கள் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டன. கடந்த சிலநாட்களாக இங்கிருந்து தான் எல்லையை தாண்டி நூற்றுக்கணக்கான டூரோன்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் நிலைகள் குறித்து உளவறியவும், ஆயுதங்களுடனும் டுரோன்களை அனுப்பப்பட்டன. அவற்றின் பெரும்பாலான டுரோன்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.