பழைய குற்றாலத்தில் வனத்துறை அத்துமீறல்- கலெக்டரிடம் புகார்
1 min read
Forest Department encroachment in Old Courtallam – Complaint to Collector
27.5.2025
பழைய குற்றாலம் அருவியை அபகரிக்கும் நோக்கத்தில் வனத்துறையினர் தன்னிச்சையாக செய்து வரும் அத்துமீறல்கள் குறித்து அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழர் விவசாய நீர்வள பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ச.டேனி அருள்சிங் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்
தென்காசி மாவட்டம்,பழைய குற்றாலம் அருவி நீண்ட காலமாக பொதுப்பணித் துறை மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதுவரை ஆயிரப்பேரி ஊராட்சியும் பொதுப்பணி துறையும் சீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக வனத்துறையினர் தன்னிச்சையாக பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க பெரும் முயற்சி செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பழைய குற்றாலம் அருவி பகுதியில்
பொதுப்பணித்துறை மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளை வண்ணம் பூசி அழித்துள்ளனர்.
இது பற்றி தமிழர் விவசாய நீர் வளம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்
ச.டேனி அருள் சிங் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
வணக்கம்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை அபகரிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் உள்ளாட்சி அமைப்புகள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பினரும கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த 17.03.2025 அன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி கேட்ட கேள்விக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது மற்றவர்கள் யாரும் அதில் தலையிட முடியாது அது பொதுப்பணித் துறையின் முழு கட்டுபாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பழைய குற்றாலம் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச்
சொந்தமான கட்டிட சுவர்களில் எழுதப்பட்டிருந்த திட்ட அறிக்கைகள் அறிவிப்புகள்,
முழுவதிலும் பச்சை நிற பெயிண்ட் கொண்டு அழித்துள்ளனர். இது தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பிற்கு புறம்பாகவும் மக்கள் எண்ணத்திற்கு எதிராகவும் உள்ளது.
எனவே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் வனத்துறையினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் எக்காரணம் கொண்டும் பழைய குற்றாலம் அருவியை பொதுமக்களின் எண்ணங்களுக்கு எதிராக செயல்படும் வனத்துறை யினரை கட்டுப்படுத்துவதோடு வனத்துறையினரை பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.