சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரம்; பேரிடராக அறிவித்தது கேரள அரசு
1 min read
Kerala government declares cargo ship sinking a disaster
29.5.2025
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடக்கத்தின் எதிரொலியாக, அரபிக்கடலில் பலத்த காற்று வீசியது.
இதன் தொடர்ச்சியாக கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது. மேலும் சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன.
இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 24 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் 9 பேர் உடனடியாக உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை பயன்படுத்தி கடலுக்குள் குதித்து நீந்திச்சென்று தப்பித்தனர். ஹெலிகாப்டர் மூலமும், மாற்று கப்பல் மூலமும் 12 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கடலில் ரசாயனம் கொட்டியதும், அப்பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பாக கடலோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கப்பலில் அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கடந்த 25-ந்தேதி கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது.
சரக்கு கப்பலில் இருக்கும் 640 கண்டெய்னர்களில், 13 கண்டெய்னர்களில் மிக ஆபத்தான பொருட்கள் உள்ளன. இதனால், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்து உள்ளது. கப்பலில், 12 கண்டெய்னரில் கால்சியம் கார்பைடு என்ற ரசாயன பொருட்கள் உள்ளன. வெடிக்க கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியனவும் உள்ளன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சர்வதேச கடல்வழி சட்டங்களின் கீழ் இழப்பீடு தரப்பட வேண்டும் என மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்திடம் கேரள அரசு முறைப்படி தெரிவித்தது உள்ளது. இதற்காக, கேரள தலைமை செயலாளருடன், அந்நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று கூட்டம் ஒன்றை நடத்தி விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கப்பல் விபத்து சம்பவத்தின் தொடர்ச்சியாக, கேரளாவின் கடல்வழி சூழல் மற்றும் மீன்வளம் பெரியளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என அப்போது தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதி துறையில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.