அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிக நீக்கம்- உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min read
Supreme Court orders temporary lifting of US ban on reciprocal taxation
30.5.2025
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும் உத்தரவிட்டார்.
மேலும் பல நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று கூறி உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கடுமையாக விமர்சனம் செய்தார். அரசின் வரி விதிக்கும் முறைக்கு தடை விதிப்பது நீதித்துறையின் அத்துமீறல் என்று விமர்சனம் செய்தார். மேலும் தேர்வு செய்யப்படாத நீதிபதிகள் அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் சார்பில் அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.
வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மேலும் வரிவிதிப்பை நிறுத்தி வைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்து உச்சநீதிமன்றம் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தற்காலிக அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.