ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
1 min read
American college principal suspended 2 days before retirement
1.6.2025
ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான டாக்டர் எம். தவமணி கிறிஸ்டோபர், மே 29ம் தேதி கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மதுரையில் மிகவும் பழமையான அமெரிக்கன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் செயலராகவும், முதல்வராகவும் எம். தவமணி கிறிஸ்டோபர் பதவி வகித்து வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணியாற்றிய ஜ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்த போது, இந்தப் பல்கலைக் கழகத்தின் அலுவல் பணிகளைக் கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் தவமணி கிறிஸ்டோபரும் உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். இவர் மீது வருவானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து தவமணி கிறிஸ்டோபர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான டாக்டர் எம். தவமணி கிறிஸ்டோபர், மே 29ம் தேதி கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக, முதல்வர் பால் ஜெயகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.