2 நாள் காய்ச்சல் இருந்தால் டாக்டரை அணுக விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவுரை
1 min read
If you have a fever for 2 days, you should consult a doctor – Scientist Soumya Swaminathan advises
3.2.2025
நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதாக மக்கள் மத்தியில் சற்று பயம் நிலவுகிறது.
புதிய வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது ஒமைகரான் வைரசின் பிரிவுகளான சில புதிய வைரசுகள் பரவி இருக்கின்றன. இந்த புதிய வைரசுகளால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் இந்த வைரஸ்கள் மிக மிக விரியம் குறைந்தவை. தமிழக மக்களுக்கு ஏற்கெனவே கொரோனா காலத்தில் போதிய அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. பெரும்பாலானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக மக்களிடம் போதிய அளவுக்கு எதிர்ப்பு சக்தி இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சிலருக்கு இணை நோய் காரணமாக இந்த வைரககளின் தாக்கம் ஏற்படக் கூடும். அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. 2 நாட்கள் காய்ச்சல் இருந்தால் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.புதிய வைரசுகளால் உண்டாகும் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் மிக சாதாரண அளவிலேயே இருக்கும். பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பே இல்லை. எனவே தற்போது பரவி வரும் புதிய வைரஸ் பற்றி பொதுமக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவை இல்லை. மூத்த குடிமக்கள் என்றாலும் மூத்த குடி மக்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.
அதிலும் சாக்கரை நோய் இருப்பவர்கள் அல்லது ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று இருந்தால் அவர்களும் கவனமாக இருப்பது நல்லது.புதிய இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். பொது விழாக்கள் மற்றும் மக்கள் இருக்கும் ரெயில், பஸ் பயணங்களின் போது முகக்கவசம் அணிவதில் தவறு இல்லை.
இவ்வாறு டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறினார்.