ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் மங்களாசாசனம்
1 min read
Nammalvar Mangalasasana at Adhinathar Alwar Temple, Azhwar Thirunagari
4.6.2025
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் கோவில், நம்மாழ்வாரின் அவதார தலமாகும். இக்கோவிலில் நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை சுவாமி நம்மாழ்வார், நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணியளவில் நவ திருப்பதி கோயில்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய பெருமாள்களுக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தார்.
பின்னர் சுவாமி நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா காலங்களில் காலையிலும் மாலையிலும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். 8-ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடைபெறுகிறது. 9-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.