அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை
1 min read
12 countries banned from entering the US
5.6.2025
அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிர தமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், மியான்மர் , சாட், காங்கோ, இகுவடோரியல் கினியா, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு வர அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவு வருகிற 9-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பயணத் தடையை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
அதில் அவர் கூறும்போது, கொலராடோவில் நடந்த சமீபத்திய தாக்குதல், முறையாக சரிபார்க்கப்படாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் தீவிர ஆபத்துகளை விளக்குகிறது. இதனால் பல நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளேன். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகேல் ஜாக்சன் கூறும் போது, அமெரிக்காவுக்கு மிக அதிகமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த வகையில் 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
நமக்கு பிரச்சினையை விளைவிக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன் என்றார்.
இதற்கிடையே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர் விசாக்களை கட்டுப்படுத்தும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.