“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு முடக்க பார்க்கிறது”-அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
“The state government is trying to block central government projects” – Annamalai alleges
தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-
தி.மு.க.,போல் அல்லாமல் தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாவட்டம் கோவை. கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை திறக்க வலியுறுத்துவோம். கோவையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் நாம் மாட்டியும் கூட, நம்ம சொன்ன டார்க்கெட்டை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில், உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்தியாவில் 100 சதவீத மக்களுக்கும் சிலிண்டர் கொடுத்துள்ளோம். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் குறைப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் குறைத்துள்ளோம். எங்களது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் குறைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்க பணியில் இங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை இன்னும் அரசு முழுமையாக கொடுக்கவில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்கள் தான்.
இந்தியா முழுவதும் பயன்பெறும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் பயன்படுத்தாமல் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து கொண்டு வந்தனர். அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதேபோன்று பிரதமரின் மருந்தகம் இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் முதல்வரின் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திட்டமும் தோல்வியடையும் நிலையில் தான் உள்ளது.
தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை.
தமிழகம் கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது. பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் பா.ஜ.க. தொண்டன். உயிர் இருக்கும் வரைக்கு இந்த கட்சியின் வளர்ச்சிக்காக மட்டும் நான் இருப்பேன். மற்ற கட்சியின் வளர்ச்சிக்காக நான் இல்லை. தொண்டனாக கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். சில இடங்களில் எங்கே வாயை மூடி கொண்டு இருக்க வேண்டுமோ, அங்கே மூடி கொண்டு இருக்கிறேன். உறுதியாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும்.
கூட்டணிக்கு எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம். கூட்டணி இரண்டு. பொருந்தும் கூட்டணி. பொருந்தா கூட்டணி என இரண்டு வகை இருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பொருந்துகிற கூட்டணியாக வரும் காலத்தில் மாறும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.மேலும் அவர் கூறும்போது அண்ணாபல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் அவர் ஏற்கனவே குற்றம் சாட்டிய 2 போலீஸ் அதிகாரிகள் பெயரை வெளியிட்டார். டி.ஆர்.பாலு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தானே நீதிமன்றத்தில் அவர்களிடம் கேள்விகளை கேட்பேன் என்றும் கூறினார்.