4 பேர் சாவுக்கு காரணமான சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்திற்கு சீல்; உரிமையாளர் கைது
1 min read
4 people die in Sundarapandiyapuram old age home – care home sealed; owner arrested
13/6/2025
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவில் ஏற்ப்பட்ட ஒவ்வாமை காரணமாக 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதனை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 பேர் தங்கி உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 11 பேருக்கு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கோட்டையைச் சார்ந்த சங்கர் கணேஷ் (வயது45) முருகானந்தம் (வயது 45) சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்பிகா (வயது 48) மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பார்வையிட்டதோடு உடனடியாக சாம்பவர் வடகரை அன்னை முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு தங்கி உள்ள நபர்களின் உடல்நலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சுமார் 50 நபர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனைவரையும் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அவர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பற்றி சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து தவிர விசாரணை நடத்திய போலீசார் முதியோர் காப்பகம் நடத்திய ராஜேந்திரன் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் குளுக்கோஸ் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் சித்திக் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.