இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியது
1 min read
Lightning strikes England 30,000 times in one night
15.6.2025
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. மேற்கு நகரமான சல்போல்க்கில் 30 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.இந்தநிலையில் தலைநகர் லண்டன், சபோல்க் ஆகிய நகரங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
அதேசமயம் மழை பெய்தபோது ஒரே இரவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை மின்னல் தாக்கியதாக பதிவானது. அவற்றில் பல மின்னல்கள் கடல் பகுதியில் பதிவாகின.எனவே இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்திலும் கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அங்கு காட்டுத்தீயும் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களது சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதேபோல் மின்னல் காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவியது. எனவே லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. இதற்காக விமான நிலைய நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியது. மேலும் கனமழையால் பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் ரெயில் சேவை குறித்த தகவல்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.