குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
1 min read
Bodies of 47 passengers killed in Gujarat plane crash handed over to relatives
16.6.2025
கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். அதே சமயம், தரையில் இருந்தவர்கள் 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்படுவதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுவரை 87 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாகவும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பலர் குஜராத்தின் ஜுனாகத், பாவ்நகர், கேதா, மெஹ்சானா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.