சவுதி அரேபியாவில் பத்திரிகையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
1 min read
Journalist executed in Saudi Arabia
16.6.2025
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்-ஜாசர் கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கைதாகி சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்-ஜாசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கமிட்டி(சி.பி.ஜே.), இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பத்திரிகையாளர் அல்-ஜாசர் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சி.பி.ஜே. அமைப்பின் தலைவர் கார்லஸ் மார்ட்டினெஸ் கூறுகையில், “பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2018-ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச சமுதாயம் நீதி வழங்க தவறிவிட்டது. இதனால் இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.