காதலுக்கு எதிர்ப்பு:காதலனை வரவழைத்து தாயை கொன்ற 10-ம் வகுப்பு மாணவி
1 min read
Class 10 student kills mother after inviting boyfriend over for opposing love
25.6.2025
தெலுங்கானா மாநிலம் ஜுடி மெட்லா ஷிபூர் நகரை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 39).
இவர் தெலுங்கானா கலாச்சார கலைஞர் குழுவில் நடன கலைஞராக இருந்து வந்தார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது. முதல் கணவருக்கு ஒரு மகள் பிறந்தார். முதல் கணவர் இறந்த பிறகு ரவி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் ரவி இறந்தார்.
முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு நலகொண்டாவை சேர்ந்த டி.ஜே மாஸ்டர் சிவா (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து நட்பாக பழகி வந்தனர்.
பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் அவரது தாய் அஞ்சலிக்கு தெரியவந்தது. காதலை கைவிடுமாறு மகளிடம் அஞ்சலி வற்புறுத்தி வந்தார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
காதலுக்கு இடையூறாக உள்ள தாயை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி காதலன் சிவாவுக்கு போன் செய்த மாணவி தாயை கொலை செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கு சிவா மறுப்பு தெரிவித்தார். காதலி மிரட்டியதால் சிவா அவரது தாயாரை கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.
கடந்த திங்கட்கிழமை காதலனுக்கு போன் செய்து தாய் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். சிவா 17 வயதுடைய தனது சகோதரருடன் அஞ்சலி வீட்டுக்கு வந்தார்.
அப்போது மாணவி தனது தாய் வீட்டில் உள்ளே இருக்கிறார். சென்று கொலை செய்யுங்கள் என தெரிவித்தார். காதலனை வீட்டிற்குள் அனுப்பிய மாணவி யாரும் வராமல் கண்காணிக்க வீட்டிற்கு வெளியே நின்று இருந்தார்.
சகோதரருடன் வீட்டுக்குள் சென்ற சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஞ்சலி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது சிவாவும் அவரது சகோதரரும் அஞ்சலியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர்.
அப்போது பள்ளிக்கு சென்ற இளைய மகள் வீட்டுக்கு வந்தார். அவரிடம் மாணவி தாய் வீட்டுக்குள் யாரையும் அனுப்ப வேண்டாம் என கூறியதாக சொல்லி பக்கத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அஞ்சலி இறந்து விட்டதாக கருதிய சிவா வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். மாணவி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மீண்டும் காதலனுக்கு போன் செய்து தாய் இன்னும் சாகவில்லை. வந்து கொலை செய்துவிட்டு போ என தெரிவித்தார்.
மீண்டும் வீட்டிற்கு வந்த சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
பின்னர் மாணவி தங்களது உறவினர்களுக்கு போன் செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜுடி மெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாணவியை பிடித்து விசாரித்த போது தங்களது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் மற்றும் அவரது சகோதரரை வரவைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அவரது காதலன் சிவா, அவரது சகோதரரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.