நெல்லை கொலைகள் நெஞ்சை பதறவைக்கிறது; நயினார் நாகேந்திரன் அறிக்கை
1 min read
The paddy killings are heartbreaking; Nayinar Nagendran’s statement
9.7.2025
தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை, இதுதான் தமிழகத்தில் நான்கு ஆண்டு சாதனை என்று தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மது போதையினால் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வள்ளியூர் அருகே தனியாக வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டி ஒருவர் நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன. தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை இவ்விரு செய்திகளும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளன.
ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதிசெய்ய முடியாதது மட்டுமன்றி, வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் தி.மு.க., அரசின் நான்காண்டு கால சாதனை.
ஆளத் தெரியாதவர்கள் கைகளில் சிக்கியுள்ள நமது தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், பஞ்சமில்லாமல் எங்கும் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன, தி.மு.க.,-வின் கூலிப்படைகள் போல போலீசார் செயல்படுகின்றனர். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் மக்கள் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழும் தமிழக மக்கள், அடுத்த சட்டசபைத் தேர்தல் எப்போது வரும், இந்த அலங்கோல ஆட்சியை அரியணையிலிருந்து எப்போது அகற்றலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.