கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய் -4 ஆண்டுக்குப்பிறகு சிக்கினர் -திடுக்கிடும் வாக்குமூலம்
1 min read
15.3.2020
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள மலையடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா (35). கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 4 வருடங்களுக்கு முன், இவரது மகன் லால் கிருஷ்ணன் (13), திடீரென தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் இறந்ததாகவும் பளுகல் போலீசில் வசந்தா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் லால் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர்.
லால் கிருஷ்ணன் உடல், பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததும், தொண்டையில் சில தூக்க மாத்திரைகள் இருந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் மூச்சு திணறல் ஏற்பட்டு, சிறுவன் இறந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வசந்தாவின் கணவர் குடும்பத்தினர், இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரும் வசந்தா மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் மாறி, மாறி விசாரணை நடத்தியும் இதில் துப்பு துலங்க வில்லை. எனவே இந்த சம்பவம் அப்படியே கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் லால் கிருஷ்ணன் இறந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். வசந்தாவும், அவரது கள்ளக்காதலனாக இருக்கும் மலையடி பகுதியை சேர்ந்த பா.ஜ. பிரமுகர் சுபனன் என்பவரும் சேர்ந்து தான் சிறுவன் லால் கிருஷ்ணனை கொலை செய்துள்ளனர். எனவே வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து வசந்தாவை, தனிப்படை போலீசார் மீண்டும் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது. 4 வருடங்களுக்கு பிறகு என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது என்று கூறிய வசந்தா, பின்னர் போலீசாரின் தொடர் விசாரணையில் தனது மகன் லால் கிருஷ்ணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது கள்ளக்காதலன் சுபனனுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் கூறினார்.

இதையடுத்து சிறுவன் லால் கிருஷ்ணன் இறந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு வசந்தா, அவரது கள்ளக்காதலன் சுபனன் ஆகியோர் 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். கைதான வசந்தா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :
கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வந்த எனக்கு, சுபனன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கள்ளக்காதலர்களாக மாறினோம். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின், வீட்டில் தனிமையில் இருப்போம். சம்பவத்தன்று திடீரென எனது மகன் லால் கிருஷ்ணன் பள்ளியில் இருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வீட்டுக்கு வந்து விட்டான். அன்று நானும், சுபனனும் உல்லாசமாக இருந்ததை அவன் நேரில் பார்த்து விட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், எப்படியும் இதை வெளியில் சொல்லி விடுவான். மேலும் அவனது தந்தையிடம் கூறி விடுவான் என்பதால், லால் கிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தோம். வீட்டுக்குள் வந்ததும் ஓட முயன்ற அவனை அங்கிருந்த சங்கிலியால் கழுத்தை நெரித்தோம். மயங்கி விழுந்த அவனது வாயில் தூக்க மாத்திரைகளை போட்டு தண்ணீர் ஊற்றினோம் . தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றான் என கூறி பாறசாலை மருத்துவமனையில் சேர்த்தேன்.

பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது லால் கிருஷ்ணன் இறந்தான். பளுகல் போலீசில் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததை வைத்து என்னிடம் விசாரித்தனர். ஆனால் சுபனன் தனக்கு தெரிந்த போலீசாரை வைத்து அப்போது நிலைமையை சமாளித்தார். இதனால் நாங்கள் சிக்க வில்லை. எங்களது கள்ளக்காதலும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் இப்போது வழக்கை மீண்டும் விசாரித்த போது சிக்கி கொண்டாம். இவ்வாறு வசந்தா வாக்குமூலத்தில் கூறியள்ளார். கைதான சுபனன், வசந்தா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வசந்தா, சுபனன் கள்ளக்காதல் விவகாரத்தால் தான் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தான் கணவரை வசந்தா, பிரிந்ததாக உறவினர்கள் கூறி உள்ளனர். இந்த கொலைக்கு பிறகும் அவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்துள்ளது. கள்ளக்காதலை தொடர வசதியாக தனது மகளுக்கு 18 வயது நிரம்பியதும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், சுபனனுக்கு திருமணம் செய்தும் வைத்துள்ளார்.