நெல்லை அருகே விபத்து -விஏஓ உள்ளிட்ட 2 பேர் பலி
1 min read
பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிகண்டன் (32). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மூக்குபீறியில் விஏஓவாக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் பாளை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த மனோகரன் மகன் அவினாஷ் (25).
இந்நிலையில் 15ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் பணி நிமித்தம் காரணமாக மணிகண்டன் பைக்கில் மூக்குபீறிக்கு செல்வதற்கு திட்டமிட்டார். இதனையறிந்த அவினாஷ் அவருடன் தானும் வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து நண்பர்கள் இருவரும் பைக்கில் புறப்பட்டனர். பைக்கை அவினாஷ் ஓட்டினார். பின்னால் மணிகண்டன் இருந்தார்.
பைக் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று ெகாண்டிருந்தது. அப்போது நெல்லை நோக்கி வந்த வேன் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மணிகண்டன், அவினாஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன், அவினாஷ் ஆகியோர் இறந்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.