குற்றாலம் அருவிகள் மூடல் -கயிறு கட்டி தடுப்பு
1 min read
19.3.2020
கொரோனா பாதிப்பால், தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்து வரும் நிலையிலும் கேரள மாநிலத்தில் இருந்து இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் குற்றாலத்திற்கு வருகின்றனர். தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் குற்றாலம் வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிப்பகுதிக்கு வருவதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும், கூடுமானவரை அருவி பகுதிக்கு வர வேண்டாம் என தென்காசி கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 19ம் தேதி காலை மெயினருவி உள்ளிட்ட அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நுழைய முடியாதவாறு கயிறுகள் கட்டியும், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அத்துமீறி நுழைபவர்களை கண்காணிக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருவி பகுதிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு மூடப்பட்டுள்ளதால் அங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.