பக்தர்களுக்கு தடை – திருச்செந்தூர் கோயில் வெறிச்சோடியது
1 min read
நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்களை வரும் 31ம்தேதி வரை மூட அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 20ம் தேதி முதல் வரும் 31ம்தேதி வரை சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயிலில் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வழக்கத்திற்கு வந்துள்ளது. இதனால் 20ம் தேதி காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடற்கரையில் புனித நீராடிய ஒருசில பக்தர்களும் போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் அங்கிருந்து வெளியேறினர். கோயில் வளாகத்தில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பால்குட பக்தர்கள் தடுத்து நிறுத்தம்
பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தூண்டிகை விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை கோயில் வளாகத்தில் தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துக் கூறினர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால்குடத்தை மட்டும் பாதுகாவலர்கள் வாங்கி அபிசேகத்திற்காக கோயிலுக்குள் கொண்டு சென்றனர். கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கோயில் மற்றும் வளாகத்தில் திரிசுதந்திரர்கள், செக்யூரிட்டிகள், கோயில் பணியாளர்கள் மட்டுமே காணப்பட்டனர்.