டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு
1 min read
Returning attendees of Delhi Dablique Jamaat Convention
2/4/2020
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்று திரும்பிய பலர் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் கண்டறியப்பட்டு 13 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் நாகப்பட்டினம் ஆஸ்பத்திரியிலும் உள்ள கோரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கேரளாவில் இருந்து சொந்த ஊரான பெருஞ்சேரிக்கு வந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் கண்டறியப்பட்டு 36 பேர் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் , மீதமுள்ள 6 பேர் பூந்தமல்லியிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த அய்யனார் ஊற்று பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவக் குழு ஒன்று அந்தப் பகுதியில் முகாமிட்டு, அங்குள்ள மக்களை பரிசோதித்து வருகிறது.
தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படும் 34 பேர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் சமீபத்தில் மராட்டிய மாநிலத்திற்கு சென்று திரும்பியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய சென்னை திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களை, அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்கவைத்து பரிசோதானை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை
ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தார்.