டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
1 min read
3.4.2020
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள இருப்பு ஊராட்சி காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில் உள்ள கிழக்கிருப்பு கிராமத்தில் டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடி உள்ளனர். இதனால் மது பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நெய்வேலி பகுதியில் கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் மது விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
தற்போது ரூ.120 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில்கள் ரூ.300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2ம் தேதி நள்ளிரவில் கிழக்கிருப்பு அரசு மதுபான கடையின் பூட்டு உடைந்த நிலையில் இருந்ததை கண்டு அவ்வழியே வந்த பொதுமக்கள் இதுகுறித்து ஊமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளே சென்று மது கடையில் சோதனை செய்து பார்த்தனர். அதில், கடையில் இருந்த ரூ.1,70,000 மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது.
மேலும் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21ல் இயங்கி வந்த டாஸ்மாக் கடையின் மேற் கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் கடையில் திருடு போன பாட்டில்கள் மதிப்பு ரூ. 60,000 என தெரியவந்தது. நெய்வேலி பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்து டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.