சிலுவை புனித சின்னமான நாள்
1 min read
The sacred iconic day of the cross by Jesusu

10/4/2020
ஒரு காலத்தில் மரண பயத்தை ஏற்படுத்திய சிலுவை இப்போது மரணபயனத்தை போக்கும் புனித சின்னமாக மாறியுள்ளது. அப்படி புனித சின்னமாக சிலுவை மாறிய நாள்தான், இன்று.
இயேசுநாதர்
யூதர்களின் பழைய ஏற்பாட்டில் உள்ள குறைகளைக் களைந்து மக்களை நல்வழிபடுத்திய மகானை (இயேசு நாதர்) குற்றவாளி எனக் குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. அந்த நாட்டில் மரண தண்டனை என்பது தண்டனை விதிக்கப்பட்டவரை சிலுவையில் வைத்து ஆணியால் அடித்துவிடுவார்கள். அவர்கள் சித்ரவதைக்குள்ளாகி சிலுவையிலேயே இறந்து போவார்கள்.
இப்படி ஒரு தண்டனைதான் இயேசு நாதருக்கும் விதிக்கப்பட்டது. மண்ணின் மாந்தர்களுக்கான அந்த இறைமகன் உயிர்துறந்த நாள் இது.
புனித வெள்ளி
இயேசு மரணிக்கும்வரை சிலுவை மரண பயத்தை ஏற்படுத்தும் சின்னமாக விளங்கியது. இயேசுவின் இன்னுயிரை தாங்கியபின், சிலுவை புனித சின்னமாக மாறியது.
மரணத்தின் சின்னமாக விளங்கிய சிலுவை, மரண பயத்தைப்போக்கும், பாவத்தை மன்னிக்கும் சின்னமாக மாறியது. அந்த வகையில் சிலுவை புனித சின்னமாக மாறிய நாள் இது. இந்த நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கிறார்கள். இயேசுவால் சாதாரண வெள்ளி புனித வெள்ளி ஆனது.
“குட்பிரைடே” என்பதன் தமிழாக்கம் தான் புனித வெள்ளி. ஆனாலும் எனக்கு ஓர் உறுத்தல். இயேசுநாதர் மரணத்தை நாளை புனித நாள் என்று சொல்ல மனம் மறுக்கிறது. இந்த நேரத்தில் அன்றைய காலத்தில் எங்கள் நெல்லை பகுதி மக்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. இந்த நாளை அவர்கள் துக்கப்பண்டிகை என்றே கூறுவார்கள். இயேசு மக்களுக்காக மரித்த நாள் பண்டிகைதான். ஆனால் மகிழ்ச்சியான பண்டிகை அல்ல. துக்க பண்டிகை. எவ்வளவு பொருத்தமாக பெயர் வைத்துள்ளார்கள்.
இயேசு உயிர்பித்த மூன்றாம் நாளை ஈஸ்ட்டர் என்று அழைக்கிறார்கள். அல்லது பெரிய ஞாயிறு என்று கூறுவார்கள். புனித வெள்ளியைவிட இந்த நாளை கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
கொரோனா
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எல்லா கோவில் மற்றும் ஆலயங்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் முறைபடி பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இன்று புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலங்களில் பக்தர்கள் கூடாமல் முறைப்படி பூஜை முட்டும் நடத்தப்படும். மற்றபடி கிறிஸ்தவர்கள் வீட்டிலேயே வழிபாடு நடத்துவார்கள்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று(9-4-2020) மாலை பெரிய வியாழன் வழிபாடுகள் நடைபெற்றன.
பேராலய துணை அதிபர் சூசைமாணிக்கம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர், தியான இல்ல இயக்குனர் ஜான்சன் மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், இந்த வழிபாடுகளை பேராலய இணையதள தொலைக்காட்சியில் பக்தர்கள் காண வழிவகை செய்யப்பட்டிருந்தது.
பாதம் கழுவுதல் ரத்து…
இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய வரலாற்றின் அடிப்படையில், பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பேராலய அதிபர் அல்லது துணை அதிபர் ஆகியோர் இறைமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சுகாதார அறிவுறுத்தல்படி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
இன்று புனித வெள்ளியும் சம்பிரதாயபடி நடைபெறும்.