‘ஆரோக்கிய சேது’ செயலி- 13 நாளில் 5 கோடி பேர் பதிவிறக்கம்
1 min read
13 நாளில் 5 கோடி பேர் பதிவிறக்கம்
உலகிலேயே குறைந்த நாளில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த ‘ஆரோக்கிய சேது’ செயலி
16.4.2020
ஆரோக்கிய சேது செல்போன் செயலியை கடந்த 13 நாட்களில் 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே குறைந்த நாட்களில் அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இது மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் (என்ஐசி) கடந்த 2ம் தேதி ‘ஆரோக்கிய சேது’ என்ற பெயரில் செல்போன் செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை நாட்டு மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதனை ஆன்ட்ராய்ட், ஐ–போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செல்போன் செயலி செயல்படுகிறது.
‘ஆரோக்கிய சேது’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களின் செல்போன் எண், வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
செல்போனில் பதிவிறக்கம் செய்தபிறகு தங்கள் இருப்பிடம் (ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை இந்த செல்போன் செயலி எச்சரிக்கும்.
இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும். இதைத் தொடர்ந்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ உதவியை பெற முடியும். அதேபோல் இந்த செயலியில் தற்காப்பு முறை, விழிப்புணர்வு முறைகள் உள்ளன. மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது விவரங்களை அரசுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரி விக்கப்பட்டுள்ளது. இது அறிமுகம் செய்யப்பட்ட 13 நாட்களில் 5 கோடி பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறும்போது, “மிகக் குறைந்த நாட்களில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன் செயலி இதுதான். 5 கோடி பேரை அடைய தொலைபேசி 75 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ரேடியோ 38 ஆண்டுகளையும், டி.வி. 13 ஆண்டுகளையும், இன்டர்நெட் 4 ஆண்டுகளையும், பேஸ்புக் 19 மாதங்களையும், போகிமான் 19 நாட்களையும் எடுத்துக்கொண்டது. ஆனால் ‘கொவைட்–19’க்கு எதிரான போராட்டத்துக்காக பயன்படுத்தப்படும் ‘ஆரோக்கிய சேது’ செயலி வெறும் 13 நாட்களில் 5 கோடி பயனாளர்களை எட்டி உலக அளவில் சாதனை புரிந்துள்ளது.
இந்த செயலியை வைத்திருப்பவர்களுக்கு அருகே கொரோனா தொற்று உடையவர் இருந்தால், அது உடனடியாக எச்சரிக்கை செய்யும். எனவே இதுபொதுமக்களுக்கு அவசியமானது” என்றார்.