கொரோனாவில் இருந்து மீண்ட டாக்டர் உட்பட இருவரை கைதட்டி வழியனுப்பிய கலெக்டர்
1 min read
16.4.2020
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இருந்து கடந்த 30ம்தேதி அரசு மருத்துவர் உட்பட இருவர் கொராேனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஏப்.1ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது நலம் பெற்றதையடுத்து அவர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருவாசகமணி மற்றும் டாக்டர்கள் பழங்கள் கொடுத்து, கைதட்டி உற்சாகமாக நேற்று வீட்டிற்கு வழியனுப்பினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க வைக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேர் கொராேனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர் இறந்துவிட்டார். 5 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேரில் இருவர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டிற்கு அனுப்பப்பட்ட இருவருக்கும் இருமுறை டெஸ்ட் எடுக்கப்பட்டதில் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இங்கு டீன், உறைவிட மருத்துவர், டாக்டர்கள், நர்ஸ்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. தினமும் 150 முதல் 200 பேர் வரையிலும் மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் 400 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. போல்டன்புரம் பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 11 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த கட்டுப்பாடு. அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மொபைல் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வசதிக்காக 5 வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் விவசாயம், கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறிய தொழில்களையும் மீண்டும் துவக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.