ஊரடங்கு மீறல், போலீசாருக்கு மிரட்டல் -அதிமுக நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு
1 min read
ஊரடங்கு மீறல், போலீசாருக்கு மிரட்டல் -அதிமுக நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு
17.4.2020
சென்னை: ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அயனாவரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டோக்கன் வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும், என அதிமுக நிர்வாகியும், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய இயக்குனருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேனர் வைத்திருந்தார். இதை பார்த்து அங்கு மக்கள் கூட்டம் திரண்டது.
அவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி டோக்கன் வழங்கியுள்ளார். இதுகுறித்து அயனாவரம் மண்டல அதிகாரி நாராயணன் அயனாவரம் போலீசில் 16ம் தேதி புகார் கொடுத்தார்.
அதில், அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி அனுமதியின்றி பேனர் வைத்ததாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி பொதுக்களை திரட்டியதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மற்றும் போலீசார் அந்த பேனரை அகற்றி, அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மீது 144 தடையை மீறுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், தடையை மீறி பேனர் வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், பெரவள்ளூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணி அகரம் சந்திப்பு பகுதியில் சமீபத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, தனது ஆதரவாளர் வாகனத்தை பிடித்து விட்டதாக கூறி, அங்கு வந்த அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பரணியிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பரணி, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.