அறிகுறி உள்ள அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் -புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
1 min read
அறிகுறி உள்ள அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்; கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
17.4.2020
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 21 நாள் முழு ஊரடங்கு கடந்த 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், வரும் 20ம் தேதி முதல் சில விலக்குகள் அளிக்கப்படும் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் 15ம் தேதி வெளியிட்டது. இதில், ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு விவசாயம், சிறு, குறு தொழில் நிறுவன கட்டிட பணிகள், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற தொழிற்சாலைகள் இயங்கவும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், எலக்ட்ரீஷியன், கார்பென்டர்கள், பிளம்பர்கள், மோட்டார் மெக்கானிக் கடைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 736 மாவட்டங்களில் கொரோனாவால் அதிகம் பாதித்த பகுதிகளாக ஹாட் ஸ்பாட் அடையாளம் காணப்பட்ட 170 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இந்த 170 மாவட்டங்களில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு 17ம் தேதி வெளியிட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் அறிகுறி உள்ள அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அறிகுறி உடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தவும் அறிவுரை. கொரோனா பாதித்தவருடன் இருந்தவர்களுக்கு நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டும்.
கொரோனா அதிகம் பாதித்துள்ள வட்டாரத்தில் இருந்து வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.