இத்தாலி கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி; எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை
1 min read
Italy’s favorite coronavirus vaccine; Successful testing of mice
6-5-2020
கொரோனா தடுப்பூசியை இத்தாலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக கூறி உள்ளனர். அந்த தடுப்பூசியை எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
உலக நாடுகளில் எண்ணற்றோரை கொன்று மக்களை பீதிக்கு உள்ளாக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
இந்த நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறி இருக்கிறது.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது.
மேலும், தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.